தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தது அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக செங்கோட்டையன் கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார். இப்படியான நிலையில் ஈரோட்டில் வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி விஜயின் கூட்டத்திற்கு மாற்று ஏற்பாடாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே 16 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பவளத்தாம்பாளையத்தில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த இடத்திற்கு அனுமதி கேட்டு மற்றொரு கடிதம் வழங்க உள்ளதாகவும் கூறினார். மேலும் விஜய் வருகையால் ஈரோட்டில் மாபெரும் மாற்றம் நிகழும் என்றும் சூளுரைத்துள்ளார். கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்க உள்ளது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
