தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, தற்போது அவரது அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலையில் முதல்வருடன் சேர்த்து மொத்தம் 10 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பில் உள்ள சூழலில், சட்டவிதிகளின்படி இன்னும் 25 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்பும் வகையில், நாளை (வியாழக்கிழமை) புதிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும், இதில் சுமார் 20 பேர் வரை புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும் கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த முக்கிய நிகழ்விற்காக, தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகச் செயல்பட்டு வரும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று மாலை சென்னை திரும்புகிறார். புதிய அமைச்சர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, இன்று மாலை ஆளுநரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் நாளை புதிய அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழா மிக எளிமையான முறையில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்களின் பட்டியலில் தவெக-வின் முக்கிய எம்.எல்.ஏ-க்களின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து என். மரிய வில்சன் (ஆர்கே நகர்) அல்லது வி.எஸ். பாபு (கொளத்தூர்), இ.சி.ஆர். பி. சரவணன் (சோழிங்கநல்லூர்), மற்றும் ரேவந்த் சரண் (மதுரவாயல்) ஆகியோர் அமைச்சராகும் வாய்ப்பில் டாப்பில் உள்ளனர். மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் எஸ். ரமேஷ் (ஸ்ரீரங்கம்), முகமது ஃபர்வாஸ் (அறந்தாங்கி), சத்யபாமா (திருப்பூர் வடக்கு), விஜய்தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு) மற்றும் வி. சம்பத்குமார் (கோவை வடக்கு) ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் முன்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதேபோல் தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆர். விஜயசரவணன் (தஞ்சாவூர்), எம்.வி. கருப்பையா (சோழவந்தான்), மாதர் பதுருதீன் முஸ்தபா (மதுரை மத்திய தொகுதி), ஆர்.எஸ். முருகன் (திருநெல்வேலி) மற்றும் சதீஷ் கிறிஸ்டோபர் (ராதாபுரம்) ஆகியோரது பெயர்களும் இந்த உத்தேசப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மண்டல வாரியாகவும், சமுதாய வாரியாகவும் சமநிலையைப் பேணும் வகையில் முதல்வர் விஜய் இந்த டாப் 13 பெயர்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் வெளியாகி இருக்கும் இந்தத் தகவல், தவெக தொண்டர்களிடையே தற்போதே பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
