தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் களத்தில் வெற்றி பெற்று முதலமைச்சராக வர வேண்டும் என்ற அதீத பற்று, நெல்லை மாவட்டத்தில் ஒரு தொண்டரின் உயிரைப் பறிக்கும் நிலைக்குத் தள்ளியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் செட்டிகுளம் அருகே உள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்த இசக்கியப்பன் (40), அக்கட்சியின் கிளைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். தீவிர விஜய் ரசிகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் தலைவர் முதல்வராக வேண்டி, 16 அடி நீளவேல் அலகைக் குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் அளவுக்குத் தீவிரப்பற்று கொண்டவராக இருந்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் சூழல்கள் தனக்குச் சாதகமாக இல்லை என்றும், விஜய் முதல்வர் ஆவதில் சிக்கல்கள் நிலவுவதாகவும் கருதி மனமுடைந்த இசக்கியப்பன், இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரசியல் தலைவர்கள் மீதான பற்று என்பது உயிரை மாய்த்துக் கொள்ளும் எல்லைக்குச் செல்வது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு அரசியல் மாற்றமும் உயிர்களைப் பலிகொடுத்து நிகழக்கூடாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
