தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்த இளம் பெண் ஆசிரியர் ஒருவர், தனது பணியை ராஜினாமா செய்யும்போது தனக்கு நேர்ந்த துயரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட ஒரு நபர் ஊதியத்திற்கு, பல மனிதர்களின் வேலையைத் தன்னை வைத்து வாங்கியதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். ஆங்கிலம், இலக்கணம், கணினி, உரையாடல் (Conversation) போன்ற பாடங்களை நடத்தச் சொன்னது மட்டுமன்றி, நடனப் பயிற்சியாளர் வேலையையும் தன்னையே செய்யக் கட்டாயப்படுத்தியதாக அவர் அந்த வீடியோவில் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், காலையில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி ஒரு சில நிமிடங்கள் தாமதமாக வந்தாலும், அன்றைய நாள் முழு சம்பளமும் கழிக்கப்படும் என்ற கொடுமையான விதியை அங்கே பின்பற்றியுள்ளனர். அதுமட்டுமன்றி, தனது தாய்மொழியான இந்தியில் பேசினால் கூட சில சமயங்களில் அபராதம் விதிக்கப்பட்டதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஆசிரியர் பணிக்கு முன்பிருந்த மதிப்பு முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும், பாடம் நடத்துவதைத் தாண்டி புதிய மாணவர் சேர்க்கை (Admissions), பள்ளி விழாக்கள் மற்றும் இதர கூடுதல் வேலைகளைச் செய்யச் சொல்லி நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மிகுந்த கோபத்தோடும் மனவேதனையோடும் பேசிய அந்த ஆசிரியை, “இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் கல்வியாளர்களாக நடத்தப்படுவதில்லை, மாறாகக் கூலித் தொழிலாளர்களைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்று சாடியுள்ளார். தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த சம்பளம், அளவுக்கு அதிகமான வேலைப் சுமை மற்றும் இடைவிடாத மன அழுத்தம் ஆகியவை தற்போது பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் அன்றாடப் பிரச்சினையாக மாறியுள்ள சூழலில், அந்த இளம் ஆசிரியை எழுப்பியுள்ள இந்த கேள்விகள் முற்றிலும் நியாயமானதே என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
