தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகராக திகழ்ந்தவர் வெண்ணிறாடை மூர்த்தி. இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் என்பதால் இவரும் வழக்கறிஞராக ஆக ஆசைப்பட்டார். ஆனால் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பை பயின்றதோடு சரி, வழக்கறிஞராக ஆக முடியவில்லை. அதனை தொடர்ந்து தனியார் கம்பெனியில் பணிக்கு அமர்ந்தார் வெண்ணிறாடை மூர்த்தி.
எனினும் அந்த வேலை பிடிக்காததால் அதில் இருந்து வெளியேறிய வெண்ணிறாடை மூர்த்தி, சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில துறை ஆசிரியராக பணிக்கு அமர்ந்தார். எனினும் வெண்ணிறாடை மூர்த்திக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அதனை தொடர்ந்து ஒரு நாள் தனது நண்பரான சக்ரவர்த்தி என்பவரிடம் தனது சினிமா ஆசையை வெளிப்படுத்தினார். சக்ரவர்த்தி அந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் மிகப் புகழ்பெற்ற இயக்குனரான ஸ்ரீதரிடம் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வந்தார்.
அதன் பின் சக்ரவர்த்தி வெண்ணிறாடை மூர்த்தி குறித்து ஸ்ரீதரிடம் கூற, ஸ்ரீதர் வெண்ணிறாடை மூர்த்தியை நேரில் வரச்சொன்னார். அதன்படி வெண்ணிறாடை மூர்த்தி நேரில் சென்று ஸ்ரீதரை சந்தித்தார். வெண்ணிறாடை மூர்த்தியின் முகத்தை பார்த்த ஸ்ரீதர், “நான் நகைச்சுவை கதாபாத்திரத்திற்குதான் ஒரு ஆளை தேடிட்டு இருக்கேன். நாகேஷ் மாதிரியோ சந்திரபாபு மாதிரியோ உங்க முகம் ஒரு காமெடிக்கான முகமா இல்லையே. ஒரு கதாநாயகனுக்குரிய லட்சணமான முகமால இருக்கு” என்று கூறினாராம்.
இதனை கேட்டதும் சோகத்தில் மூழ்கினாராம் வெண்ணிறாடை மூர்த்தி. “எப்பவுமே முகம் லட்சணமா இல்லைனாதான் வாய்ப்பு கிடைக்காது, ஆனா முகம் லட்சணமா இருக்கிறதே காரணம் காட்டி வாய்ப்பு தரலையே” என்று நொந்துப்போனாராம். எனினும் அதன் பின் ஸ்ரீதர் வெண்ணிறாடை மூர்த்திக்கு தனது “வெண்ணிற ஆடை” திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். அவ்வாறுதான் மூர்த்தி என்பவர் வெண்ணிறாடை மூர்த்தியாக உருவானார்.