தவெக அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் வாக்களித்த சி.வி.சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்) தரப்பு மனு அளித்ததோடு, அவர்களின் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளையும் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதற்குப் பதிலடி கொடுத்த சி.வி.சண்முகம், கட்சி தற்போது இரண்டு அணியாகப் பிளவுபட்டுவிட்டதால் தங்களைத் தகுதிநீக்கம் செய்யவோ அல்லது பதவியைப் பறிக்கவோ இ.பி.எஸ்-க்கு எந்தவித சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.
ஆனால், சமீபத்திய அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு கட்சியில் எவ்வித பிளவும் இல்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தான் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளர் என்றும் முன்னணி நிர்வாகியான எஸ்.பி. வேலுமணி திடீரெனக் கருத்து தெரிவித்துள்ளார். கட்சியின் பிளவு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேலுமணி இ.பி.எஸ்-க்கு ஆதரவாகப் பேசியுள்ள இந்தச் சம்பவம், எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே பெரும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.
