வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு முறைகேடாக விற்ற புகாரில் சிக்கிய டிக்கெட் பரிசோதகர் (TTE) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து ரயில்வே நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
வைரலான அந்த வீடியோவில், பயணி ஒருவர் தன்னிடம் டிக்கெட் இல்லை என்று கூறியபோது, அந்த அதிகாரி ரயிலின் கழிப்பறைக்கு அருகில் வைத்து அவரிடம் பேரம் பேசியுள்ளார். ரயிலின் அசல் கட்டணத்தை விட மிகக் குறைந்த தொகையை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, அந்தப் பயணியை ரயிலில் பயணிக்க அனுமதித்துள்ளார். இந்தச் சட்டவிரோதச் செயலை அங்கிருந்த மற்றொரு நபர் தனது மொபைல் போனில் ரகசியமாகப் படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, சம்பந்தப்பட்ட டிக்கெட் பரிசோதகர் உடனடியாக அடையாளம் காணப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். “ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் வந்தே பாரத் போன்ற உயர்தர ரயில்களில் நிலவும் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
