தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.
1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.
அதற்குக் காரணம் இருவருக்கும் இடையிலான படைப்பு ரீதியிலான கருத்து வேறுபாடுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு 35 ஆண்டுகளாக சினிமாவில் பணியாற்றி வந்தாலும் இணைந்து ஒரே ஒரு பாடல் கூட பணியாற்றவில்லை. பலரும் அவர்களை சேர்த்து வைக்க முயற்சி செய்த போதும் அது நடக்கவில்லை.
வைரமுத்துவாவது பொது மேடைகளிலோ அல்லது பழைய பாடல்கள் பற்றி பேசும்போதே இளையராஜாவின் பெயரைக் குறிப்பிடுவார். ஆனால் இளையராஜா அவர்கள் பிரிவுக்குப் பிறகு வைரமுத்து பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை. இந்நிலையில் நடிகர் மாரிமுத்து, வைரமுத்துவிடம் பாடல் உதவியாளராக பணியாற்றிய போது வைரமுத்து, இளையராஜாவைப் பற்றி நெகிழ்ச்சியாக பேசிய ஒரு தருணத்தைப் பற்றி பேசியுள்ளார்.
ஒரு நேர்காணலில் “ஒருநாள் வைரமுத்து அவர்கள் இளையராஜாவிடம் வேலை பார்த்த திருப்தி எனக்கு வேறு எந்த இசையமைப்பாளரிடமும் கிடைக்கலையா.. லட்டு மாதிரி ட்யூன் கொடுப்பான்யா அந்தாளு. எனக்குள்ள கிடக்கிற தமிழ அந்த ட்யூன் சுண்டி இழுத்து வெளியக் கொண்டுவரும். இப்ப உள்ளவங்க ட்யூனே புரிஞ்சுக்க முடியல.. இவங்களுக்கு தத்தகாரமே சொல்ல தெரியல.. முதவாட்டி ஒன்னு சொல்லுறாங்க. ரெண்டாவது வாட்டி ஒன்னு சொல்லுறாங்க… ஒரு சொல் மாறினாலும் அது வேற ட்யூனுன்னு இவங்களுக்கு தெரிய மாட்டேங்குது” எனக் கூறினார்” எனப் பகிர்ந்துள்ளார்.
