தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத வகையில் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த அரசியல் சூழலில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் ஆலோனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமானது அல்ல, மாறாக தமிழக அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப் போகும் ‘பக்கா ஸ்கெட்ச்’ என்பது அரசியல் வட்டாரங்களில் தெளிவாகத் தெரிகிறது. சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தவெக அரசு அமைந்த பிறகு கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், ஆரோக்கியமான நிர்வாகம் நடக்கிறது என்றும் விஜய்க்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பில் வைகோ கையில் எடுத்த முக்கிய அஸ்திரம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் ஆகும். வேதாந்தா நிறுவனம் தங்களின் ஆலையை ‘கிரீன் காப்பர்’ என்ற புதிய பெயரில் மீண்டும் இயக்கத் திட்டமிட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய வைகோ, ஸ்டெர்லைட் அதிபர்களுக்கு எக்காரணம் கொண்டும் முதல்வர் விஜய் அனுமதி தந்துவிடக் கூடாது என்று ஒரு விரிவான அறிக்கையை அளித்துள்ளார். மேலும், வைகோவின் 30 ஆண்டு கால நாடாளுமன்ற உரைகள் புத்தகமாகத் தயாராகி உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லியில் நடக்கும் இதன் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை முதல்வர் விஜய் பெற வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார். இதற்கு நடுவில், தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் வலுவாகக் கேட்டுப் பெற, அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட ‘தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி’ பதவியை வைகோவுக்கு வழங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக மதிமுக வட்டாரங்கள் ரகசியம் உடைத்துள்ளன.
மறுபுறம், இந்த நகர்வுகள் மூலம் சுமார் 9 ஆண்டுகளாக நீடித்த திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த கால தேர்தல்களில் பெரும்பாலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக நிர்பந்திக்கப்பட்டதால், தங்களின் தனித்துவ அடையாளம் காணாமல் போவதாகக் கட்சிக்குள் நீண்டகாலமாகக் குமுறல்கள் இருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள அதிருப்தி மதிமுகவை தவெக நோக்கி நகர்த்தியுள்ளது. இதன் உச்சகட்டமாக, உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற மதிமுகவின் கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன் மற்றும் சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்நாதன் ஆகிய இருவரும், தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் போது திமுக கொறடா உத்தரவை மீறி அவையைப் புறக்கணித்துத் தங்களின் தவெக விசுவாசத்தைக் காட்டினர்.
தற்போது ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் வரும் ஜூன் 27-ம் தேதி நடைபெறவிருக்கும் மதிமுகவின் முக்கிய பொதுக்குழு கூட்டத்தின் மீதுதான் உள்ளது. இந்தப் பொதுக்குழுவிற்குப் பிறகு, அந்த இரண்டு மதிமுக எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, வரவிருக்கும் இடைத்தேர்தலில் தவெக கூட்டணியில் மதிமுகவின் சொந்தத் தனிச் சின்னத்தில் மறுபடியும் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் மெகா கூட்டணியாகச் சந்தித்த திமுகவிலிருந்து பல முக்கியக் கட்சிகள் ஏற்கனவே விலகி வரும் நிலையில், மதிமுகவின் இந்த அதிகாரப்பூர்வ முடிவு ஜூன் 27-க்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தை வெடிக்கப் போவது மட்டும் நிஜம்.
