தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஆளும் கட்சியான திமுக தனது கூட்டணியை வளமாக வைத்துக் கொண்டு இந்த முறை மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. ஆனால் கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. அவர்களிடம் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். ஆனால் கூடுதல் தொகுதிகளை கேட்கும் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக இணையத்தில் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது.
இதனிடையே கூட்டணிக்கு பங்கம் விளைவிக்கும் எந்த கருத்தையும் கூற மாட்டோம் என்று வைகோ கூறியுள்ளார். காங்கிரஸ் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று எம்.பி மாணிக்கம் தாகூர் பேசியதற்கு பதில் அளித்த அவர், லட்சுமண ரேகையை தாண்டும் பழக்கம் மதிமுகவுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணி கட்சிகளை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
