“வெறும் 40 நாட்களில் ரூ.2.4 லட்சம் கோடி காலி”… கையை மீறிய செலவால் நிலைகுலைந்த வல்லரசு அமெரிக்கா… வரலாற்றில் முதன்முறையாக நடந்த சம்பவம்…!

By Nanthini on வைகாசி 20, 2026

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கின. இது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு நேரடிப் போராக வெடித்த நிலையில், சுமார் 40 நாட்கள் நீடித்த இந்த மோதலில் அமெரிக்கா தனது அதிநவீனப் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் உட்பட மொத்தம் 42 வான்வழிச் சொத்துக்களை இழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவை அமைப்பு, பாதுகாப்புத் துறை மற்றும் மத்திய கட்டளை அமைப்பு (CENTCOM) வழங்கிய தரவுகளின் அடிப்படையில் சமர்ப்பித்த அதிகாரபூர்வ அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

   

இந்த வான்வழி இழப்புகளில் அமெரிக்காவின் பெருமைக்குரிய அதிநவீனத் தொழில்நுட்பங்கள் பலத்த சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 24 MQ-9 ரீப்பர் (Reaper) ட்ரோன்கள், 1 MQ-4C ட்ரைடன் (Triton) கண்காணிப்பு ட்ரோன் மற்றும் வான்வெளியில் வீழ்த்த முடியாததாகக் கருதப்பட்ட 1 F-35A லைட்னிங் II (Lightning II) ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஆகியவற்றை அமெரிக்கா இழந்துள்ளது. இவை தவிர, 4 F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள், 1 A-10 தண்டர்போல்ட் II தரைவழித் தாக்குதல் விமானம் மற்றும் எரிபொருள் நிரப்பும் 7 KC-135 ஸ்ட்ராடோடேங்கர் விமானங்கள் உள்ளிட்ட பல முக்கிய வான்வழிப் படைக்கலன்கள் இதில் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ளன.

மறுபுறம், இந்தத் தீவிர மோதலால் அமெரிக்காவின் ராணுவச் செலவினங்கள் கையை மீறி அதிகரித்துள்ளதாக பென்டகனின் தற்காலிகக் கட்டுப்பாட்டாளர் ஜீல்ஸ் டபிள்யூ ஹெர்ஸ்ட் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நிதி ஒதுக்கீட்டுக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரானில் நடந்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் செலவு மதிப்பீடு சுமார் ₹2.4 லட்சம் கோடியாக ($30 Billion+) உயர்ந்துள்ளது என்றார். போரில் சேதமடைந்த அதிநவீனப் போர் உபகரணங்களைப் பழுதுபார்ப்பதற்கும், இழந்த விமானங்களுக்கு மாற்றாகப் புதிய விமானங்களை வாங்குவதற்கும் ஏற்பட்ட பெரும் பட்ஜெட் தேவையே இந்த நிதி நெருக்கடிக்கு முதன்மைக் காரணம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

   

இந்த அதிகாரபூர்வ அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் அமெரிக்காவை கடுமையாகச் சாடியுள்ளார். உலகமே வியந்து பாராட்டும் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானத்தை வான்வெளியில் சுட்டு வீழ்த்திய முதல் நாடு என்ற பெருமையை ஈரானின் ஆயுதப்படை பெற்றுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற வல்லரசு நாடுகளின் கூட்டு வான்வழித் தாக்குதல் வியூகங்களையும் மீறி, ஈரான் தனது ஏவுகணைத் தடுப்பு ஆற்றலால் அமெரிக்காவின் அதிநவீனப் போர் விமானங்களை வீழ்த்தியிருப்பது சர்வதேச ராணுவ வட்டாரத்தில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.