அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றம் தணிந்து, உலகமே நிம்மதிப் பெருமூச்சு விட்ட சில மணி நேரங்களிலேயே, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் மிக விலையுயர்ந்த ‘MQ-4C Triton’ ட்ரோன் மாயமாகியிருப்பது மீண்டும் போர் மேகங்களைச் சூழ்ந்துவரச் செய்துள்ளது. வளைகுடா போர் ஒரு மாத காலத்திற்குப் பிறகு ஒரு தற்காலிக முடிவுக்கு வந்து, இரு நாடுகளும் இரண்டு வார காலப் போர் நிறுத்தத்திற்குச் சம்மதித்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியில் உள்ள தனது தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்த ட்ரோன், திடீரென ‘Code 7700’ என்ற அவசரக்கால எச்சரிக்கையை விடுத்து, ஈரான் எல்லைப் பகுதியில் ரேடார் திரையிலிருந்து மறைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாயமான இந்த MQ-4C Triton ட்ரோன் சாதாரணமான ஒன்றல்ல; அமெரிக்கக் கடற்படையின் “ஆகாயக் கண்” என்று அழைக்கப்படும் இது, சுமார் 1,700 கோடி ரூபாய் ($200 மில்லியன்) மதிப்புடையது. 50,000 அடி உயரத்தில் பறந்து, கடலில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து கண்காணிக்கும் திறன் கொண்டது. அமெரிக்காவிடம் தற்போது வெறும் 20 ட்ரோன்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா அல்லது ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்திற்குள் இது நடந்திருப்பது, அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மோதலில் அமெரிக்கா செய்யும் ராணுவச் செலவுகள் மலைக்க வைக்கின்றன. புள்ளிவிவரங்களின்படி, இந்தப் போருக்காக ஒவ்வொரு வினாடிக்கும் சுமார் 9.8 லட்சம் ரூபாயை அமெரிக்கா செலவிடுகிறது. ஒரு நாளைக்கு ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுக்கு மட்டுமே 3,040 கோடி ரூபாயும், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளுக்குத் தனியாக 3,800 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது. இவ்வளவு பிரம்மாண்டமான தொகையைச் செலவழித்து வரும் வேளையில், விலையுயர்ந்த ட்ரோன் ஒன்று மாயமாகியிருப்பது அமெரிக்காவின் பாதுகாப்பு வியூகத்திற்குப் பலத்த அடியாகக் கருதப்படுகிறது.
தற்போது பெர்சிய வளைகுடாப் பகுதியில் மாயமான ட்ரோனைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரான் தனது கடல் எல்லையை வர்த்தகக் கப்பல்களுக்குத் திறந்துவிடச் சம்மதித்த நிலையில், இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு மோதலுக்கு வித்திடுமா அல்லது தொழில்நுட்பத் தவறாகக் கடந்து போகப்படுமா என்பது அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அறிக்கைக்குப் பிறகே தெரியவரும். அமைதியை நோக்கித் திரும்பிய வளைகுடா பிராந்தியம், இப்போது மீண்டும் ஒரு நிச்சயமற்ற பதற்றமான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
