கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த முதியவரான விருத்தாம்பாள், நேற்று மாலை தனது நிலத்தில் விளைந்துள்ள கம்பு பயிரைப் பாதுகாப்பதற்காகவும், பறவைகளை விரட்டுவதற்காகவும் வயலுக்குச் சென்றுள்ளார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில், இன்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்தபோது, விருத்தாம்பாள் தனது கம்பு வயலிலேயே தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்த மூதாட்டியின் உடலை உறவினர்கள் பார்வையிட்டபோது, அவர் அணிந்திருந்த தாலி, தங்கச் சங்கிலி, மூக்குத்தி, கொலுசு உள்ளிட்ட அனைத்து நகைகளும் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மர்ம நபர்கள் நகைகளைக் கொள்ளையடிப்பதற்காகவே மூதாட்டியை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து வரஞ்சரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான உண்மையான காரணம் நகைப்பறிப்பா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். வயலுக்குச் சென்ற மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
