BREAKING: அமெரிக்கா – ஈரான் மோதல்… இந்தியாவில் உளவுத்துறை ‘ரெட் அலர்ட்’…. உஷார் நிலையில் மாநில அரசுகள்….!

By Nanthini on பங்குனி 2, 2026

Spread the love

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல், தற்போது இந்தியாவிலும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி போரில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஷியா முஸ்லிம் ஜமாஅத் அமைப்பினர் அமெரிக்க தூதரகங்களை முற்றுகையிட முயன்று வருகின்றனர். இந்த உணர்ச்சிகரமான சூழலைத் தொடர்ந்து, நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படக்கூடும் என்றும், வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை மிக நெருக்கமாகக் கண்காணிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தவும், வதந்திகள் பரவுவதைத் தடுத்து சட்ட ஒழுங்கைப் பராமரிக்கவும் மாநில காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச விவகாரங்களால் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.