தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுப்பு தெரிவித்த 12 ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் குத்தி கொலை செய்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்குள் லவ் டார்ச்சர் தாங்க முடியாமல் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடைய மனைவி மலர்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளை உள்ளனர். இதில் மூத்த மகளான வினிஷ்கா(19) என்பவரும் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் மாதேஷ் (19) என்பவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். தற்போது அந்தப் பெண் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்நிலையில் பெற்றோர்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்த நிலையில் காதலை கைவிட்டுள்ளார். இதனால் விரத்தியடைந்த மாதேஷ் அடிக்கடி வினிஸ்காவின் வீட்டு அருகே வந்து லவ் டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சல் அடைந்த அந்தப் பெண் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
