“100 மாடுகள் டூ 1 பில்லியன் டாலர்”… உலக அழகியை கொடுங்கள், இல்லையென்றால் போர்… துருக்கியை மிரட்டும் உகாண்டா அதிபர் மகன்…!

By Nanthini on சித்திரை 12, 2026

Spread the love

உகாண்டா நாட்டின் அதிபர் யோவேரி முசேவேனியின் மகனும், அந்நாட்டு ராணுவத் தளபதியுமான முஹூசி கைனெருகபா, துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. துருக்கி நாட்டிடம் சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.93 ஆயிரம் கோடி) நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒருவேளை இந்தப் பணம் வழங்கப்படாவிட்டால், உகாண்டாவிலுள்ள துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும், இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் முழுமையாகத் துண்டிக்கப்படும் என்றும் அவர் எக்ஸ் (X) தளத்தில் எச்சரித்துள்ளார்.

மேலும், துருக்கி தொடர்ந்து உகாண்டாவை வஞ்சித்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள கைனெருகபா, இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டுமானால் துருக்கி தனது நாட்டுப் பெண்களை உகாண்டா ஆண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று விசித்திரமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். குறிப்பாக, துருக்கியின் உலக அழகியைத் தனக்கு மனைவியாக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். உகாண்டா படைகள் இயேசு கிறிஸ்து மற்றும் முகமது அலி ஆகியோரால் ஈர்க்கப்பட்டவை என்பதால், துருக்கியால் தங்களை ராணுவ ரீதியாக வீழ்த்த முடியாது என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

   

மேற்கு ஆசியப் போர் பதட்டங்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள கைனெருகபா, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு லட்சம் உகாண்டா வீரர்களை அனுப்பத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது “புனித நிலத்தைப் பாதுகாக்கும் முயற்சி” என்று அவர் வர்ணித்துள்ளார். ஏற்கனவே இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு 100 மாடுகளைச் சீதனமாகத் தருவதாகவும், அவரைத் திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெலோனியின் மணப்பெண் விலை குறித்துப் பேச இத்தாலியத் தூதருக்கு அவர் பகிரங்க அழைப்பு விடுத்ததும் கடந்த காலங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

   

ராணுவத் தளபதியாகவும், உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையின் முக்கிய அதிகாரியாகவும் இருக்கும் ஒரு உயரிய பொறுப்பிலுள்ள நபர், அண்டை நாடுகளையும் சர்வதேசத் தலைவர்களையும் அவமதிக்கும் வகையில் இவ்வாறு தொடர்ந்து பதிவிடுவது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உகாண்டாவின் தேசபக்தி லீக்கின் தலைவராகவும் உள்ள இவரின் இத்தகைய தன்னிச்சையான கருத்துக்கள், ஆப்பிரிக்கக் கண்டத்தின் வெளியுறவுக் கொள்கைகளில் குழப்பத்தை விளைவிப்பதோடு, சர்வதேச இராஜதந்திர உறவுகளையும் கேள்விக்குறியாக்கியுள்ளன.