துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இன்று நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இத்தொகுதி எப்போதுமே திமுகவின் அசைக்க முடியாத கோட்டை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இங்கு யாரை வேட்பாளராக நிறுத்தினாலும், கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. அவர் “யாரை நிறுத்தினாலும்” எனக் குறிப்பிட்டிருப்பதன் மூலம், 2026 தேர்தலில் அவர் தனது தற்போதைய தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிக்கு பதிலாக வேறொரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உதயநிதி ஸ்டாலின் மாநிலம் தழுவிய அளவில் அதிக கவனம் செலுத்தும் வகையில் புதிய வியூகமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
