கோவை மாவட்டம் கணியூரில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாக விமர்சித்தார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவை மையப்படுத்தி அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தனது உரையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை படிப்படியாக அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதாகக் குறிப்பிட்ட உதயநிதி, “2019-ல் அதிமுகவை பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்தார், 2021-ல் அதை லீஸுக்கு விட்டார், தற்போது 2026 தேர்தலில் ஒட்டுமொத்தமாக விற்றுவிட்டார்” என்று சாடினார். அதிமுகவின் நிறுவனரான எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால், அக்கட்சி இருக்கும் நிலையை கண்டு நிச்சயம் கண்ணீர் வடித்திருப்பார் என்றும் அவர் உணர்ச்சிவசப்படக் குறிப்பிட்டார்.
மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாகத் தாக்கிப் பேசிய அவர், பாஜகவின் ‘கலவர அரசியலை’ தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்றார். மேலும், மகளிர் விடியல் பயணத் திட்டம் குறித்து பிரதமர் விமர்சித்ததைக் குறிப்பிட்ட அவர், தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை முடக்க பாஜக நினைப்பதாகவும், ஆனால் திமுக அரசு எதற்கும் அஞ்சாமல் மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “மேற்கிலும் (West) திமுகதான் பெஸ்ட் (Best)” என்பதை இந்தத் தேர்தல் நிரூபிக்கும் என்று கூறிய அவர், இளைஞரணியினர் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
