மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் (UAE) புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தான் வழங்கிய 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,459 கோடி) கடனை இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகம் அதிரடியாக கெடு விதித்துள்ளது. ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் நட்பு நாடுகளின் கடனை நம்பி காலத்தை கடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, அமீரகத்தின் இந்த திடீர் உத்தரவு பேரிடியாக அமைந்துள்ளது.
இந்த கடன் தொகையை மூன்று தவணைகளாகச் செலுத்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 11-ம் தேதி 450 மில்லியன் டாலர், ஏப்ரல் 17-ம் தேதி 2 பில்லியன் டாலர் மற்றும் ஏப்ரல் 23-ம் தேதி 1 பில்லியன் டாலர் என மொத்தம் 3.5 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் வழங்க வேண்டும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 450 மில்லியன் டாலர் என்பது கடந்த 1996-97 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட 30 ஆண்டு கால பழைய கடனாகும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தத் தொகையை தற்போது வட்டியுடன் சேர்த்து அமீரகம் உடனடியாகக் கோரியுள்ளது.
பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏற்கனவே மிகவும் பலவீனமாக உள்ள நிலையில், இந்தத் தொகையைத் திரட்டுவது அந்நாட்டு அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்காக சீனா, சவுதி அரேபியா மற்றும் அமீரகம் ஆகிய நாடுகள் வழங்கிய 12.5 பில்லியன் டாலர் வைப்புத்தொகை 2027 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பழைய கடன்களைத் திருப்பித் தரக் கோருவது பாகிஸ்தானின் பொருளாதாரத் திட்டங்களைச் சிதைத்துள்ளது. இதனால் அந்நாட்டு மத்திய வங்கி தனது கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்தால், எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் பாகிஸ்தான் பெரும் சிக்கல்களைச் சந்திக்கும். ஏற்கனவே பணவீக்கத்தாலும், கடன் சுமையாலும் தத்தளிக்கும் மக்களுக்கு இது மேலும் சுமையை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பாகிஸ்தானின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
