கனடாவின் எட்மண்டன் நகரில் பஞ்சாபைச் சேர்ந்த குர்தீப் சிங் (27) மற்றும் ரன்வீர் சிங் (18) ஆகிய இரு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது எட்மண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில், டிசம்பர் 13, அன்று அதிகாலை 1:43 மணியளவில் துப்பாக்கிச்சூடு குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.குர்தீப் சிங், பஞ்சாபில் உள்ள பரே கிராமத்தைச் சேர்ந்தவர், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு உயர் கல்விக்காக கனடா சென்றவர்.
ரன்வீர் சிங், உத்தத் சைதேவாலா கிராமத்தைச் சேர்ந்தவர், சமீபத்தில் கனடா சென்றிருந்தார். குர்தீப் சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை அனுமதிக்கு காத்திருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இருவரும் ஒரு நண்பரின் பிறந்தநாள் விருந்தில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றுள்ளனர். காரில் ஏற முயன்றபோது மர்ம நபர்களால் சுடப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற, இருண்ட நிறத்திலான எஸ்யூவி ரக வாகனத்தை காவல்துறை தேடி வருகிறது. இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. பிரேதப் பரிசோதனைகள் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கனடாவில் உள்ள பஞ்சாபி புலம்பெயர்ந்தோர் சமூகத்தினர் மத்தியில் கடும் கோபத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது
