குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த விமல் பிரஜாபதி என்பவர், தோசை செய்வதற்காக அருகில் உள்ள கடையில் பாக்கெட் மாவு வாங்கியுள்ளார். அந்த மாவைக் கொண்டு செய்த தோசையைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே விமல் பிரஜாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதில் துரதிர்ஷ்டவசமாக விமலின் மூன்று மாதக் குழந்தை ரஹா மற்றும் நான்கு வயது மகள் மிஷ்ரி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விமல் மற்றும் அவரது மனைவி பாவனா பிரஜாபதி ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அந்த மாவினை விற்பனை செய்த ‘கன்ஷியாம் டெய்ரி’ (Ghanshyam Dairy) மீது விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால், அந்தக் கடையின் உரிமையாளர் கேதன் படேல் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் தினமும் 100 முதல் 150 கிலோ வரை தோசை மாவு விற்பனை செய்வதாகவும், இதுவரை யாரிடமிருந்தும் இது போன்ற புகார்கள் வந்ததில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, அந்த கடையில் இருந்த மாவு மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். தோசை மாவில் ஏதேனும் விஷத்தன்மை கலந்திருந்ததா அல்லது அது காலாவதியானதா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உயிரிழந்த இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
