“மத்திய அமைச்சர் பதவி கொடுத்தா அதிமுகவை பாஜகவிடம் விற்றுவிடுவார்”.. எடப்பாடியை அசிங்கப்படுத்திய தவெக நிர்மல் குமார்..!!

By Muthu Mani on ஆனி 6, 2026

Spread the love

அதிமுக தலைமையின் மீதான கடுமையான நம்பிக்கையின்மையால் தான், அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது தங்களை மாற்றிக்கொண்டு தானாகவே தவெகவில் இணைந்து வருவதாக அக்கட்சியின் இணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், அதிமுக தலைமை எவ்வாறு செயல்படுகிறது என்பதை உலகமே பார்த்து வருவதாகச் சாடினார். மேலும், அடுத்த சில ஆண்டுகளில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அமைச்சர் பதவியை பாஜக அறிவித்தால், தனது அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை பாஜகவுடன் இணைக்கும் பணியைக் கூட அவர் தயங்காமல் செய்வார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் இத்தகைய சுயநலப் போக்கால், அதிமுகவில் 40 முதல் 50 ஆண்டுகளாகக் கட்சிக்காக உழைத்த உண்மையான தொண்டர்கள் இன்று முற்றிலுமாகத் தவிப்பிற்குள்ளாகி, கைவிடப்பட்டுள்ளனர் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நம்பி உழைத்த தொண்டர்கள், இன்று தங்களின் பழைய பாதையை மறந்து திமுகவுடன் கூட்டணி சேர முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமியை எப்படி நம்பி பயணிக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பி வருவதாக நிர்மல் குமார் குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் அதிமுகவில் இருப்பவர்கள் அனைவரும் குறுநில மன்னர்களாகச் செயல்பட்டு, ஆங்காங்கே கட்சியைத் தங்களின் வசம் வைத்துக்கொண்டு, சொந்த சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ளவே அதிமுக என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி வருவதாக விமர்சித்தார். இதேவேளையில் திமுகவையும் சாடிய அவர், திமுகவினர் எப்போதுமே தங்களின் குடும்பக் கதவுகளை மூடிக்கொண்டு வெளியே வருவதே இல்லை என்றும், கருணாநிதி குடும்பமாகத் தொடங்கி ஸ்டாலின் குடும்பமாக மாறி, தற்போது உதயநிதியின் குறிஞ்சி இல்லத்தின் கதவுகளை மட்டுமே தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.