தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தகட்ட அரசியல் பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ளனர். சேலம் தைலானூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து செய்தியாளர்களிடம் உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார். இந்த விழாவில் உறி அடித்தும், பறை இசைத்தும் பொதுமக்களுடன் இணைந்து அவர் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினார்.
செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அடுத்த மக்கள் சந்திப்பு பயணத்தை சேலத்தில் நடத்த 100 சதவீதம் வாய்ப்புள்ளதாக உறுதிபடத் தெரிவித்தார். EPS கோட்டையாக கருதப்படும் சேலத்தில்தான் அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்ததும் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் மாநாட்டிற்குப் பிறகு தொண்டர்களும் பொதுமக்களும் விஜய்யின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், சேலம் மாவட்டம் அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் வருகையை முன்னிட்டு சேலத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்ய அக்கட்சியினர் இப்போதே தயாராகி வருகின்றனர். வரும் சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு விஜய் தனது மக்கள் சந்திப்பு பயணத்தை மாநிலம் முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ள சூழலில், சேலத்திலிருந்து அதன் அடுத்த கட்டம் தொடங்குவது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தேதி மற்றும் இடம் குறித்த அறிவிப்புகள் விரைவில் தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
