தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுக மற்றும் திமுக இடையே போட்டியாக விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் விஜய் கவனம் செலுத்தி வருகின்றார்.
அதேசமயம் சமீபத்தில் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் நிவாரண உதவியை வங்கி கணக்கில் செலுத்தி இருந்தார். இந்நிலையில் தீபாவளிக்கு பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான பணிகளை தீவிர படுத்த தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி முடிந்ததும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தே விஜய் ஆறுதல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருகின்றன. இதனைத் தொடர்ந்து அவரது பரப்புரை தொடர்பான அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.
