“500 கார்டுக்கு ஒரு ரேஷன் கடை.. இலவசக் கல்வி முதல் கடன் தள்ளுபடி வரை”…. தஞ்சையில் விஜய் அள்ளி வீசிய தேர்தல் ‘அணு குண்டுகள்’….!

By Nanthini on பங்குனி 4, 2026

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அடுக்கடுக்கான அதிரடி வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். விவசாயிகளின் நலனை மையப்படுத்திப் பேசிய அவர், இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல, தவெக ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்பட வேண்டிய ‘உறுதிமொழி’ என்று முழங்கினார். குறிப்பாக, டெல்டா பகுதி விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில், 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீத கடன் தள்ளுபடி குறித்து ஆராயப்படும் என்றும் விஜய் உறுதியளித்தார். மேலும், 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள மற்றும் நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

   

விவசாய விளைபொருட்களுக்கான கொள்முதல் நிலையங்களை நவீனப்படுத்துதல் மற்றும் அங்கு நிலவும் முறைகேடுகளைக் களைவதற்குத் தனி கவனம் செலுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதைத் தடுக்கப் போதிய சேமிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும், கொள்முதல் நிலையங்களில் ஒரு பைசா கூட கமிஷன் வாங்க முடியாதவாறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், ரேஷன் கடைகளில் 500 கார்டுகளுக்கு ஒரு கடை என்ற வீதத்தில் கடைகள் அதிகரிக்கப்பட்டு, பொருட்கள் அனைத்தும் பாக்கெட் செய்யப்பட்டு வழங்கப்படும் என்றார்.

   

கல்வி, மருத்துவம், குடிநீர் மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கே தனது அரசு முன்னுரிமை அளிக்கும் என்று குறிப்பிட்ட விஜய், இளைஞர்களுக்குத் தனியார் துறையிலும் வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றார். வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து, அரசு மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டு வெளிப்படையான நிர்வாகத்தை வழங்கப்போவதாக அவர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.