தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைவரது பார்வையும் கோவை தெற்கு தொகுதியின் மீது திரும்பியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி முழுமையாகக் கைப்பற்றிய கோவையை, இந்த முறை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரடியாகக் களமிறக்கியுள்ளது. மறுபுறம், அதிமுகவின் கோட்டையைத் தக்கவைக்க அம்மன் அர்ஜுனன் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார். மும்முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் செந்தில்குமார் களத்தில் “ஆப்சென்ட்” ஆகி இருப்பது அக்கட்சி நிர்வாகிகளுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2021-ல் கமல்ஹாசன் ஏற்படுத்திய தாக்கம், இந்த முறை தவெகவின் பக்கம் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருப்பூர் வரை வந்து பிரச்சாரம் செய்த விஜய், கோவை தெற்கு பக்கம் இன்னும் தலைகாட்டாதது தொண்டர்களிடையே தொய்வை ஏற்படுத்தியுள்ளது. தவெக வேட்பாளர் செந்தில்குமாரின் பிரச்சாரம் ஆமை வேகத்தில் இருக்க, “எங்கள் வேட்பாளரை எங்காவது கண்டால் சொல்லுங்கள்” என்று கட்சியினரே புலம்பும் நிலை உருவாகியுள்ளது. மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் வாக்குகள் சிதறும் சூழலில், இது மற்ற கட்சிகளுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
தவெகவின் இந்த மந்தநிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நாம் தமிழர் கட்சி, தொகுதியில் அசுர வேகத்தில் பணியாற்றி வருகிறது. வேட்பாளர் பேரறிவாளன் வீடு வீடாகச் சென்று எதார்த்தமாகப் பேசுவதுடன், “பணம் வாங்காமல் வாக்களியுங்கள்” என்ற முழக்கத்தோடு இளைஞர்களைக் கவர்ந்து வருகிறார். சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் ஆகியோரின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது தவெகவினரை திகைக்க வைத்துள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளை நாம் தமிழர் கட்சி மொத்தமாக அறுவடை செய்யத் தொடங்கியுள்ளது.
திமுகவின் பணபலம் மற்றும் அதிகார பலத்திற்கு எதிராக அதிமுக தனது பாரம்பரிய செல்வாக்கை நம்பியுள்ளது. ஆனால், மாற்றத்தை விரும்பும் நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் யாருக்குச் செல்லும் என்பதே வெற்றியாளரைத் தீர்மானிக்கும். செந்தில் பாலாஜி மற்றும் அம்மன் அர்ஜுனன் இடையேயான நேரடிப் போட்டியில், நாம் தமிழர் கட்சியின் வேகம் தவெகவின் வாக்கு வங்கியைச் சரிக்குமா அல்லது கடைசி நேரத்தில் விஜய் நடத்தும் பிரச்சாரம் மாயாஜாலம் செய்யுமா என்பது ஏப்ரல் 23-ஆம் தேதி தெரிந்துவிடும். தற்போதுள்ள சூழலில், களப்பணியில் பின்தங்கியுள்ள தவெக, கோவை தெற்கில் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறது.
