தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆட்சியில் முதலீடுகள் சரிந்துவிட்டதாகவும், தேசிய அளவில் தொழில் ஈர்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் திமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) அண்மையில் குற்றம்சாட்டியிருந்தது. தனியார் இணையதளம் ஒன்றின் தரவுகளைச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனத்திற்கு, தமிழக வெற்றிக் கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக வலுவான மற்றும் விரிவான விளக்கத்தை அளித்து அந்தப் புகார்களை மறுத்துள்ளது.
‘பிசினஸ் ஸ்டாண்டர்ட்’ நாளிதழில் வெளியான கட்டுரை ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ எனும் தனியார் அமைப்பின் முழுமையற்றத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது எனத் தவெக தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் தொழில் முதலீட்டு நிலவரங்களை மதிப்பிடுவதற்கு, அம்மாநில அரசின் அதிகாரப்பூர்வ முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான ‘வழிகாட்டி’ (Guidance Tamil Nadu) நிறுவனம் வெளியிடும் தரவுகளே இறுதியானதும் நம்பகமானதுமாகும். அரைகுறையான தனியார் தரவுகளின் அடிப்படையில் முடிவுகளுக்கு வருவது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும்.
தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே எல் அண்ட் டி (L&T) குழுமத்துடன் ரூ.18,600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 8,200 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது. மேலும், 2026 ஜூலை மாத நிலவரப்படி, ஹிட்டாச்சி எனர்ஜி, விக்ரம் சோலார், சப் (Chubb), நோர்டெக்ஸ் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை ரூ.35,062 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளன. இது முந்தைய அரசின் தொடக்கக் காலச் செயல்பாடுகளை விட மிக வேகமான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
எனவே, ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.7,143.23 கோடி என்ற முதலீட்டுத் தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும், நடப்பு நிலவரங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் முதல் அரையாண்டிற்குள் மாநிலத்தின் முதலீட்டு இலக்குகள் மேலும் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தவறான தரவுகளைக் கொண்டு அரசியல் பிரசாரம் செய்வதை விட்டுவிட்டு அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என தவெக வலியுறுத்தியுள்ளது.
