தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று உற்சாகமாகத் தொடங்கியது. தேர்தல் ஆணையம் சமீபத்தில் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்ததைத் தொடர்ந்து, மிகுந்த உற்சாகத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தின் தொடக்கமாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டதோடு, கட்சியின் கொள்கைப் பாடல் இசைக்கப்பட்டு நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று விஜய்யுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டனர். மேடையில் விஜய் ஏறியதும் அங்கிருந்த நிர்வாகிகள் அனைவரும் விசில் ஊத தொடங்கினர். அந்த சத்தத்தில் விஜய் தனது காதுகளை மூடிக்கொண்டார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் வியூகங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, கட்சியின் அடிமட்ட அளவிலான கட்டமைப்பை வலுப்படுத்துவது மற்றும் தொகுதி வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பிரச்சார யுக்திகள் குறித்து விஜய் தனது நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் எதிர்காலத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் இக்கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
