சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கைகளையும் அதன் அரசியல் வருகையையும் ‘அரசியல் பேரிடர் காலம்’ என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். உதயநிதியின் இந்த விமர்சனம் தவெக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) சமூக ஊடகங்களில் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உதயநிதியின் “பேரிடர்” என்ற வார்த்தையை வைத்தே, திமுகவின் குடும்ப அரசியலையும் கடந்த கால வரலாற்றையும் பட்டியலிட்டு தவெகவினர் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
தவெக வெளியிட்டுள்ள அந்தப் பதிவில், தமிழகத்திற்கு உண்மையான அரசியல் பேரிடர் காலம் எது என்பது குறித்து அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் காலத்து நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ளனர். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சியை, அவரது குடும்பத்தைக் கூட ஒதுக்கித் தள்ளிவிட்டு, திமுகவின் ஐம்பெரும் தலைவர்கள் வரிசையில்கூட இடம் பெறாத ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டுமே ஒட்டுமொத்தமாகத் தன்வசப்படுத்திக் கொண்டதே தமிழக அரசியலுக்கு ஏற்பட்ட ஆகப்பெரிய பேரிடர் என்று தவெக சாடியுள்ளது. மேலும், அண்ணாவிற்குப் பிறகு மு.கருணாநிதியை முதல்வராகவும் கட்சித் தலைவராகவும் ஆக்குவதற்குப் பேருதவி புரிந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை, எவ்வித நன்றி விசுவாசமும் இன்றி திமுகவில் இருந்து தூக்கி வீசிய தருணமே அந்த குடும்ப அரசியலின் பேரிடர் தொடக்கம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுகவின் தற்போதைய ஆட்சியை “திருட்டு மாடல்” என்று வர்ணித்துள்ள தவெகவினர், இந்த ஆட்சிக் காலம் முழுவதும் தமிழக மக்களுக்கும் ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரு பேரிடர்க் காலமாகவே அமைந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளனர். அதே வேளையில், தவெகவின் வருகைதான் தீயசக்தியான திமுகவிற்கான உண்மையான அரசியல் பேரிடர்க் காலம் என்றும் அவர்கள் தங்களது பதிவில் பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி கொள்ளையடிக்க முடியாத நிலையை தவெகவின் அரசியல் பிரவேசம் ஏற்படுத்தியிருப்பதாகவும், லஞ்சமும் ஊழலும் அற்ற ஒரு நேர்மையான நிர்வாகத்தை மக்கள் மத்தியில் தவெக தலைவர் உருவாக்கி வருவதாகவும், இதுவே திமுகவின் தூக்கத்தைக் கெடுத்துள்ள பேரிடர் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.
மேலும், ஊழல் வழக்குகளில் சிக்கித் தவித்து, தலைமறைவாகவும் வெளிநாட்டு மருத்துவமனைகளிலும் பதுங்கித் திரியும் திமுகவின் முன்னாள் அமைச்சர்களின் நிலையைக் குறிப்பிட்டு, அவர்கள் சிக்கினால் திமுகவின் முக்கியக் குடும்பமும் சேர்ந்து சிக்கித் திணறும் என்ற பயமே தற்போதைய திமுகவின் பேரிடர்க் காலம் என்று தவெக விமர்சித்துள்ளது. இறுதியாக, திமுகவின் தீதும் சூதும் நிறைந்த அரசியலில் இருந்து தப்பித்துக் கொள்ளத் துடிக்கும் தமிழக மக்களுக்கு தவெகவின் வருகை ஒரு அழகிய தென்றல் காலமாகவும், அகமகிழும் பேரின்பக் காலமாகவும் மாறியுள்ளது என்றும், மேடையில் உளறியாவது உண்மையை ஒப்புக் கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள் என்றும் தவெக ஐடி விங் தனது பதிவில் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளது.
