தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்குத் தொகுதியில், நள்ளிரவில் கள்ள ஓட்டு போட முயற்சி நடந்ததாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் சுமார் 85.15% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், திருச்சியிலுள்ள மதுரம் வாக்குச்சாவடியில் நள்ளிரவு ஒரு மணி வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்குக் கொண்டு செல்லப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த தவெக நிர்வாகிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு திமுகவினர் லஞ்சம் கொடுத்துக் கதவை மூடிக்கொண்டு கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசியல் வரலாற்றில் 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வருகையே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் களம் காண்பது தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இச்சூழலில், தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் செயல்பாடுகள் மீது தவெகவினர் வைத்துள்ள இந்த முறைகேடு புகார், தேர்தல் முடிவுகள் குறித்த விவாதத்தை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது.
