அதிர்ச்சி..! சாப்பாடு தருவதாகக் கூறி தூய்மைப் பணியாளர்களைக் காலணியை எடுக்க வைத்த தவெக நிர்வாகிகள்..? வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

By Soundarya on ஆனி 26, 2026

Spread the love

திருவொற்றியூர் விம்கோ நகரில் தவெக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமாரின் புதிய அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான எம்.ஆனந்த் கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் பங்கேற்க சென்னை மற்றும் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காகத் திரளாகக் கூடியிருந்தனர்.

அமைச்சர் ஆனந்தை வரவேற்பதற்காக தவெகவினர் விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களில் பேனர்களை அமைத்திருந்தனர். குறிப்பாக, திருவொற்றியூர் தேரடி சந்திப்பில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 அடி உயர பேனர், காற்றில் சரிந்தால் விபத்து ஏற்படும் என்ற அச்சத்தைப் பொதுமக்களிடையே ஏற்படுத்தியது. மேலும், மெட்ரோ ரயில் தூண்கள், சென்ட்ரல் மீடியன் ஆகிய இடங்களில் கொடிக்கம்பங்கள் கட்டப்பட்டிருந்ததோடு, மாதவரம் விரைவு சாலையில் உள்ள பேருந்து நிழற்குடையை முற்றிலுமாக மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டதால் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் கடும் இடையூறு ஏற்பட்டது.

   

இந்த விழாவின் போது, அமைச்சர் வருவதற்குச் சற்று நேரத்திற்கு முன்பாக அலுவலகத்தின் உள்ளே விஐபிகளின் காலணிகள் ஏராளமாக இருந்தன. அமைச்சர் வந்தால் இடையூறாக இருக்கும் எனக் கருதிய தவெக நிர்வாகிகள், அங்கு உணவு சாப்பிட வந்திருந்த தூய்மைப் பணியாளர்களை அழைத்து அக்காலணிகளை வெளியே எடுத்துப் போடுமாறு கூறினர். அதிகாரத்திற்கும் அமைச்சர் நிகழ்ச்சிக்கும் பயந்து தூய்மைப் பணியாளர்கள் காலணிகளை வெளியே எடுத்து வைத்தாலும், “சாப்பாடு தருகிறோம் என்று வரவழைத்து எங்களை காலணி எடுக்க வைக்கிறார்களே” என அவர்கள் மனவேதனையுடன் புலம்பினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.