தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் வாசுதேவி தலைமையிலான குழுவினர், அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று ஆய்வு நடத்தியது பொதுவெளியில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அரசு அதிகாரிகளோ அல்லது பொறுப்புள்ள பிரதிநிதிகளோ செய்ய வேண்டிய ஆய்வை, எவ்வித அரசு பொறுப்பிலும் இல்லாத அரசியல் கட்சியினர் எந்த அடிப்படையில் மேற்கொண்டனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, ஏற்கனவே கரூர் துயரம் தொடர்பான வழக்கில் அவதூறு பரப்பியதாகப் புகார் அளிக்கப்பட்டு, காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திடும் நிபந்தனையுடன் முன்ஜாமீனில் இருக்கும் ஒருவர், அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ள திமுக ஐ.டி விங், சமூக வலைதளங்களில் தீவிர விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “எந்த ஒரு அரசு அதிகாரமும் இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய யார் அனுமதி அளித்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், இது போன்ற செயல்கள் அரசு நிர்வாகத்தில் தலையிடும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் (விஜய்) தலைமையிலான தவெக நிர்வாகிகள், இத்தகைய ‘ரீல்ஸ்’ அரசியலை நடத்துவதை அனுமதித்துள்ளாரா என்று விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியின்றி இத்தகைய ஆய்வு நடைபெற்றிருந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
