48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கணும்…. 40 வீடியோ ஆதாரம் இருக்கு…. கட்சி நிர்வாகிகளை கதறவிட்ட தவெக வேட்பாளர் மோகன்….!

By Nanthini on புரட்டாதி 16, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மோகன், சக நிர்வாகி மதனுடன் தொலைபேசியில் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பக்காலம் முதல் கட்சிக்காக உழைத்த உண்மையான தொண்டர்களை ஓரங்கட்டிவிட்டு, சில நிர்வாகிகள் புதிய நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சிக்குத் துரோகம் இழைப்பதாக மோகன் அந்த உரையாடலில் பகிரங்கமாகச் சாடியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்கு உரிய அனுமதி பெற்றுத் தராமல், திட்டமிட்டுத் தன் வெற்றியைத் தடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்துத் தேர்தலில் களம் கண்ட போது, தனது சொந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளே தனக்கு எதிராகச் செயல்பட்டதாக மோகன் தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர் கார்த்திக் ராஜன், ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் அருண், ஒன்றியச் செயலாளர் சுறா சுரேஷ் மற்றும் தொப்பம்பட்டி மத்திய ஒன்றிய நிர்வாகி ஜின்னா ஆகியோர் எதிர்த்தரப்பிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு தேர்தல் பணிகளைப் புறக்கணித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கட்சி அலுவலகத்திற்கு வீடு பிடித்துக் கொடுத்தது முதல் ஃபர்னிச்சர் வாங்கியது வரை மறைமுகமாகக் கையூட்டு பெற்றதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக அவர் பேசியுள்ளார்.

   

கட்சியைக் காப்பாற்றவும், உண்மை நிலையை வெளிக்கொணரவும் 40-க்கும் மேற்பட்ட வீடியோ ஆதாரங்கள் மற்றும் தனி ஆவணக் கோப்புகளைத் தயார் நிலையில் வைத்துள்ளதாக மோகன் எச்சரித்துள்ளார். நிர்வாகிகளின் லஞ்ச அணுகுமுறை, காமவெறி அட்டூழியங்கள் மற்றும் எதிர்த்தரப்புடன் பணப் பரிவர்த்தனை பேசிய வீடியோக்கள் அனைத்தும் இதில் அடங்கும் எனக் கூறியுள்ள அவர், கட்சித் தலைவர் விஜய் மற்றும் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

   

துரோகத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் அனைவரும் ஓரிரு நாட்களில் நேரில் வந்து தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் இந்த ஆதாரங்கள் அனைத்தையும் கட்சித் தலைமைக்கும் ஊடகங்களுக்கும் முழுமையாக வெளியிட்டு அம்பலப்படுத்தப் போவதாகவும் அவர் ஆவேசமாக எச்சரித்துள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதி தவெக வேட்பாளரே தனது கட்சி நிர்வாகிகள் மீது இத்தகைய கடுமையான ஊழல் மற்றும் உள்ளடி வேலைகள் தொடர்பான புகார்களை முன்வைத்துள்ள சம்பவம், திண்டுக்கல் மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.