தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் குதிரை பேர அரசியல், மாற்றத்திற்கான அறிகுறி அல்ல, அது யாராலும் சகிக்க முடியாத துர்நாற்றம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக தலைவர் விஜய், சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜை குதிரை பேரத்தின் மூலம் ஈர்த்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மக்கள் அளித்த தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிக்கும் வகையில் இந்தச் செயல் அமைந்துள்ளதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் நிலைப்பாட்டை மீறி, சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த காரணத்திற்காகவே காமராஜ் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை தினகரன் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக, காமராஜ் அதிமுக எம்.எல்.ஏ-க்களுடன் தங்கியிருந்தபோது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அதே சமயம் அவர் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக ஆளுநரிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து தான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம் இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் உண்மையாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ், தவெகவினரிடம் கொடுத்த கடிதம் போலியானது என முன்னதாக ஆளுநரிடம் தெரிவித்திருந்தாலும், தற்போது அவர் எடுத்திருக்கும் முடிவு கட்சித் தொண்டர்களின் உழைப்பைக் கொச்சைப்படுத்தும் செயல் எனத் தினகரன் சாடியுள்ளார். தங்களை “தூய சக்தி” என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பணத்தால் வாங்க முடியும் என்ற தவறான எண்ணத்துடன் செயல்படத் தொடங்கியிருப்பது கண்டனத்திற்குரியது என அவர் கூறியுள்ளார்.
மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகக் கூறி அரசியலுக்கு வந்தவர்கள், பழைய குதிரை பேர அரசியலையே கையில் எடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்று அமமுக தலைமை தெரிவித்துள்ளது. “யாரையோ புகழ் பாடியதற்காக அவர் நீக்கப்பட்டார் எனச் செய்திகளைத் திசைதிருப்ப வேண்டாம்” என்று குறிப்பிட்ட தினகரன், மக்களின் நம்பிக்கையைப் பெற்று வென்றவர்களை விலைபேசி இழுப்பது அரசியலில் ஒரு மோசமான முன்னுதாரணமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.
