அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, மக்கள் பிரதிநிதிகளைப் பதவி ஆசையினாலும் பணத்தினாலும் ஈர்த்து, தவெக அரசு குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பான புகாரின் மீது உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். தொகுதி மக்களுக்குச் செய்த துரோகத்திற்குப் பதிலளிக்கும் வகையில், பதவிக்காகவும் பணத்திற்காகவும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறுவதைத் தடுக்கவும், தூயசக்தி என தங்களை வெளிப்படுத்திக் கொள்பவர்களின் உண்மை முகத்தைத் திரைவிலக்கவும் இந்த மனு அளிக்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அமமுக எம்.எல்.ஏவிடம் குதிரைப் பேர முயற்சியில் ஈடுபட்டதாகப் புகார் அளித்து 100 நாட்கள் கடந்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இந்த நேர்மையற்ற அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தனது புகாரைப் பரிசீலித்த ஆளுநர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஜனநாயகப் பண்புகளைச் சீர்குலைக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் கூறினார்.
