தமிழக அரசியலில் சசிகலாவின் புதிய அரசியல் நகர்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமமுக மாணவியர் அணி செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சசிகலா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டதே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. தனிப்பட்ட முறையில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜீவிதா செயல்பட்டது, டி.டி.வி. தினகரன் தரப்பிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இந்த நீக்கம் கட்சிக்குள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமமுகவில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த ஜீவிதா நாச்சியாரை, வரும் தேர்தலில் மதுரை திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு எதிராகக் களமிறக்க சசிகலா திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. தென் தமிழகத்தில் செல்வாக்குள்ள ஒரு பெண் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்த சசிகலா முயற்சிப்பது தெரிகிறது. சசிகலாவின் இந்த வியூகம், ஏற்கனவே உட்கட்சிப் பூசலில் தவிக்கும் அதிமுகவிற்குத் தேர்தல் களத்தில் புதிய நெருக்கடியையும், சவால்களையும் உருவாக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
