அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகப்படுத்திய ‘கோல்ட் கார்டு’ (Gold Card) விசா திட்டத்தில், இதுவரை ஒரே ஒரு நபருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார். சுமார் 1 மில்லியன் டாலர் (சுமார் ₹8.3 கோடி) முதலீடு செய்யும் வெளிநாட்டினர் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக வசிக்கவும் வேலை செய்யவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது. கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டபோது பெரும் வரவேற்பைப் பெற்றதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரே ஒருவருக்கு மட்டுமே விசா கிடைத்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிபர் ட்ரம்ப் இத்திட்டத்தை ‘கிரீன் கார்டின் சக்திவாய்ந்த வடிவம்’ என்று வர்ணித்துள்ளார். தொடக்கத்தில் ஒரு விசாவுக்கு 5 மில்லியன் டாலர் வரை கட்டணம் வசூலிக்கப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தற்போது 1 மில்லியன் டாலர் முதலீடு மற்றும் 15 ஆயிரம் டாலர் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த EB-5 விசா திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்ட இந்த நவீன முறையின் மூலம், உலகின் பெரும் முதலீட்டாளர்களையும் திறமையாளர்களையும் ஈர்த்து அமெரிக்காவின் கஜானாவை நிரப்ப ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
தற்போது நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பேண ஒவ்வொரு விண்ணப்பமும் தீவிரமாக ஆய்வு செய்யப்படுவதாகவும் அமைச்சர் லட்னிக் விளக்கமளித்துள்ளார். விண்ணப்பதாரர்களின் பின்னணி முழுமையாகச் சோதனை செய்யப்பட்ட பின்னரே குடியுரிமைக்கான வாய்ப்பு வழங்கப்படும். மேலும், நிறுவனங்கள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்காக 2 மில்லியன் டாலர் செலுத்தி இந்த விசாவைப் பெறும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அமெரிக்காவின் பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் கடன் சுமையைக் குறைக்க உதவும் என அரசு நம்புகிறது.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக ‘ட்ரம்ப் பிளாட்டினம் கார்டு’ (Trump Platinum Card) அறிமுகம் செய்யப்பட உள்ளது, இதன் விலை 5 மில்லியன் டாலராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு வெளியே ஈட்டும் வருமானத்திற்கு வரி விலக்கு பெற்று, சுமார் 270 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கும் ட்ரம்ப், அதே சமயம் வசதி படைத்த மற்றும் தகுதியான வெளிநாட்டினரை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற ‘கோல்டன் விசா’ திட்டங்களைச் செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
