அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்கள் குறித்து அண்மையில் அளித்துள்ள நேர்காணல் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில், அங்கிருந்த ராணுவ இலக்குகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ட்ரூத் சோஷியல் தளத்திலும் அவர் தனது வெற்றியைப் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக, என்.பி.சி (NBC) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நாங்கள் ஈரானின் கார்க் தீவை ஏற்கனவே சிதைத்துவிட்டோம், தேவைப்பட்டால் இன்னும் இரண்டு மூன்று முறை வேடிக்கைக்காக (just for fun) அங்கு மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என்று ட்ரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள அந்த நாடு விரும்புவதாகவும், ஆனால் தற்போதைய நிபந்தனைகள் தமக்குத் திருப்தி அளிக்காததால் போரைத் தொடரப்போவதாகவும் அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
மேலும், ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிரோடு இருக்கிறாரா என்பதே தமக்குச் சந்தேகமாக இருப்பதாகக் கூறியுள்ள ட்ரம்ப், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை முழுமையாக நீக்குவதே தமது இலக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு இந்தத் தாக்குதல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்தத் தொடர் எச்சரிக்கைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
