“நான் நினைச்சா நிமிஷத்துல போர் முடியும்!”… உலகையே அதிரவைத்த டிரம்பின் பகிரங்க எச்சரிக்கை… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த ‘அல்டிமேட்டம்’….!

By Nanthini on பங்குனி 12, 2026

Spread the love

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஈரான் உடனான போரை எப்போது வேண்டுமானாலும் தன்னால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தான் விரும்பும் நேரத்தில் இந்த போரை நிறுத்தும் திறன் தனக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரானின் ராணுவத் திறன் தற்போது பெருமளவில் பலவீனமடைந்துவிட்டதாகவும், அவர்களிடம் குறிப்பிடும்படியான இலக்குகள் எஞ்சியிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், டிரம்பின் இந்த கருத்துக்கு மாறாக, களத்தில் போர் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ், ஈரான் மீதான தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், தங்களின் ராணுவ இலக்குகள் முழுமையாக எட்டப்படும் வரை தெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தாக்குதல்கள் நீடிக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஈரானிய ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என இஸ்ரேல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

   

இச்சூழலில், ஈரானை மிகக்கடுமையாக எச்சரித்துள்ள அதிபர் டிரம்ப், அந்நாடு மிகப்பெரிய தவறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை ஈரான் அத்தகைய தவறைச் செய்தால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும் என்றும், உலக வரைபடத்தில் அந்த நாட்டின் பெயரைக் கூட கேட்க முடியாத சூழல் உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

   

குறிப்பாக, உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கண்ணிவெடிகளைப் பதிப்பதாக வரும் தகவல்களை டிரம்ப் தீவிரமாகக் கவனித்து வருகிறார். இச்செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ள அவர், மீறினால் இதுவரை கண்டிராத கடுமையான ராணுவ விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்று தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.