பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா, அண்ணாமலைக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் நயினார் நாகேந்திரனும் இணைந்து செயல்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணாமலை சட்டசபைக்குள் நுழைவதை இருவரும் விரும்பவில்லை என்றும், அதற்கேற்பவே திட்டமிட்டு காய்கள் நகர்த்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், நயினார் நாகேந்திரன் பாஜக மாநிலத் தலைவரைப் போலச் செயல்படாமல், எடப்பாடி பழனிசாமியின் எண்ணப்படியே செயல்படுவதாக அதிரடி புகாரை முன்வைத்துள்ளார்.
பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகத் தாமதமானதற்கு அண்ணாமலையே காரணம் என்று கட்சியின் உள்ளேயே பலருக்கு வருத்தம் இருந்ததாகத் திருச்சி சூர்யா குறிப்பிட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் தமக்குத் தேவையான இடங்களைத் திட்டமிட்டுப் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் பாஜக வலுவாக இல்லாத தொகுதிகளைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் கட்சிக்கு மறைமுகப் பலவீனத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அண்ணாமலைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் இணைந்து செயல்பட்டதே இந்தப் பின்னடைவுக்கு முக்கியக் காரணம் என்பது அவரது வாதமாக உள்ளது.
அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகியபோது அண்ணாமலை ராஜ்யசபா எம்.பி பதவி அல்லது மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்ததாகக் கூறியுள்ளார். ஆனால், அமித் ஷாவோ அவரைத் தொடர்ந்து மாநில அரசியலிலேயே வைத்திருக்க விரும்பியுள்ளார். மேலும், அண்ணாமலை ஒரு சுயநலவாதி என்றும், தன்னுடன் இருந்தவர்களுக்குக் கூட உதவ முன்வராததால் இப்போது அவரே அதன் வினையை அனுபவித்து வருவதாகவும் திருச்சி சூர்யா சாடியுள்ளார். அண்ணாமலையை நம்பி வந்த எஸ்.ஜி.சூர்யா, வினோஜ் பி செல்வம் போன்ற இளைஞர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கு அண்ணாமலையே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளைப் பெற்றிருந்தாலும், வெற்றி வாய்ப்பு இல்லாத தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுக தனது வேட்பாளர்களை அறிவித்துப் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட நிலையில், பாஜகவின் பட்டியல் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது வெளியான பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறாதது, திருச்சி சூர்யா கூறியுள்ள அரசியல் உள்விவகாரங்கள் மற்றும் கூட்டணிக்குள்ளான பனிப்போரை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
