டெல்லி லோதி காலனி பகுதியில், திருமணமாகி 72 நாட்களேயான ஆக்ரிதி சுதார் (28) என்ற இளம் பெண், கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்து வந்த அவர், ஜூலை 4 சனிக்கிழமை மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. பலத்த காயமடைந்த அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மரணத்தில் தீவிர சந்தேகம் இருப்பதாகக் கூறும் பெண்ணின் குடும்பத்தினர், இது தற்கொலை அல்ல என்றும், அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் வரதட்சணைக் கொடுமை செய்து ஆக்ரிதியை கொலை செய்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஆக்ரிதி தொடர்ந்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகக் கூறும் அவரது தம்பி, தன் அக்கா மிகவும் மனவலிமை கொண்டவர் என்பதால் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதால், சட்ட விதிமுறைகளின்படி துணைப் பிரிவு நீதிபதி முன்னிலையில் இதற்கான முதற்கட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறை இந்த சம்பவத்தை தீவிரமாக விசாரித்து வருவதோடு, பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து அனைத்து கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
