டிரம்ப் போட்ட ‘ட்வீட்’.. 20 நிமிடத்தில் 840 கோடி லாபம் பார்த்த மர்ம டிரேடர்… உலகமே பதறிய அந்த தருணம்….!

By Nanthini on பங்குனி 26, 2026

Spread the love

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒரு சமூக வலைதளப் பதிவு உலகப் பொருளாதாரத்தையே ஒரு நொடி உலுக்கியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, இஸ்ரேல் தரப்பு அதை மறுத்ததோடு, டிரம்ப் தனது பதிவையும் நீக்கினார். ஆனால், இந்தச் சிறு இடைவெளியில் சந்தையில் நடந்த மாற்றங்கள் யாரோ ஒரு மர்ம நபரைச் சில நூறு கோடிகளுக்கு அதிபதியாக்கியுள்ளது.

டிரம்ப் அந்தத் தகவலைப் பதிவிடுவதற்குச் சரியாக 15 நிமிடங்களுக்கு முன்பே, அமெரிக்கப் பங்குச்சந்தையில் அசாதாரணமான வர்த்தகங்கள் நடைபெற்றுள்ளன. திங்கட்கிழமை காலை நியூயார்க் சந்தை தொடங்குவதற்கு முன்பே (Pre-market), சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மற்றும் கச்சா எண்ணெய் ஒப்பந்தங்கள் கைமாறின. வழக்கமான வர்த்தகத்தை விட இது நான்கு முதல் ஆறு மடங்கு அதிகமாகும். டிரம்ப் என்ன சொல்லப்போகிறார் என்பது அந்த மர்ம நபருக்கு முன்பே தெரிந்திருந்தது போல இந்த முதலீடுகள் அமைந்திருந்ததுதான் இங்கு ஆச்சரியமான விஷயம்.

   

முக்கியமாக இரண்டு பெரும் ‘டிரேட்கள்’ இதில் நடந்துள்ளன. ஒன்று, போர் நின்றால் பங்குச்சந்தை உயரும் என்பதைக் கணித்து 12,600 கோடி ரூபாய் மதிப்பிலான S&P 500 ஃபியூச்சர்ஸ் வாங்கப்பட்டன. மற்றொன்று, கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்த்து 1,615 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் விற்கப்பட்டன. சரியாக அவர் கணித்தது போலவே, டிரம்பின் அறிவிப்பு வந்த 20 நிமிடங்களுக்குள் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலருக்கும் கீழ் சரிந்தது. இதன் மூலம் அந்த மர்ம நபர் வெறும் 20 நிமிடங்களில் சுமார் 840 கோடி ரூபாய்க்கும் மேல் ($100 மில்லியன்) லாபம் ஈட்டியுள்ளார்.

   

இவ்வளவு துல்லியமாக டிரம்பின் அறிவிப்புக்கு முன் முதலீடு செய்யப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் டிரம்பின் ஆட்சியில் அவ்வப்போது நடப்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு முன்னரும் வெனிசுலா அதிபர் விவகாரத்தில் ஒரு நபர் இதேபோலப் பெரிய லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ‘இன்சைடர் டிரேடிங்’ (Inside Trading) புகார்கள் குறித்து வல்லுநர்கள் விவாதித்து வரும் நிலையில், அந்தப் பெரும் தொகையை அள்ளிய மர்ம நபர் யார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது.