மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப், தனது பயனர்களின் வசதிக்காகத் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ‘Writing Help’ என்ற வசதியை மேம்படுத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் செய்திகளுக்குப் பதில் எழுதும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் இனி ஒவ்வொரு மெசேஜிற்கும் நீண்ட நேரம் யோசித்து டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த புதிய வசதியானது, பயனர்களின் முந்தைய உரையாடல்களை (Chat History) ஆய்வு செய்து, அந்தச் சூழலுக்குப் பொருத்தமான பதில்களைத் தானாகவே பரிந்துரைக்கும். பயனர்கள் தங்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான பதில்களை இதிலிருந்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வாட்ஸ்அப் சாட் பாரில் உள்ள ஸ்டிக்கர் ஐகானைத் தட்டி, அங்கிருக்கும் ஏஐ (AI) ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டாலும், பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் இருக்கும் என்று வாட்ஸ்அப் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. செய்திகளைத் திருத்தவும், அதன் தொனியை (Tone) மாற்றவும் ஏற்கனவே இருந்த வசதியோடு, தற்போது ஏஐ மூலம் பதில்களை உருவாக்கும் இந்த அப்டேட் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
