தமிழகத்தில் வரும் 2026-27 கல்வியாண்டில் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை ஆரம்பத்திலிருந்தே மேம்படுத்தும் நோக்கில், ஆசிரியர்கள் அனைவரும் இப்போதிருந்தே உரிய திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாடங்கள் நடத்தும் போதே மாணவர்களின் கற்றல் திறனைக் கண்காணித்து, அவர்களுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகள் (Special Training) மற்றும் தொடர் திருப்புதல் தேர்வுகளை (Revision Exams) முறைப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் ஏற்படும் தேர்வுக் பயத்தைத் தவிர்த்து, மாணவர்கள் முழுத் தன்னம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
