திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது மகனை சக மாணவர்கள் அவனது நிறத்தைக் கேலி செய்து, “நீ ஊதுபத்தி கலரில் இருக்கிறாய்” என்று வன்கொடுமை இழைத்ததாகவும், கை கால்களைப் பிடித்து எரியும் குப்பைக் குழியில் தள்ளியதாகவும் அந்த மாணவனின் தாய் கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்துத் தாய் அளித்த புகாரில், தனது மகன் கருப்பாக இருப்பதைச் சுட்டிக்காட்டி மாணவர்கள் தொடர்ந்து பாகுபாடு காட்டி வந்ததாகவும், திட்டமிட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் செயலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாகப் போலீசார் நடத்திய விசாரணையில் வேறு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த சிறுவனும் மற்ற மாணவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்றும், விளையாடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக இந்த அசம்பாவிதம் நடந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒருவரையொருவர் தூக்கி ஆட்டி விளையாடியபோது, நிலைதடுமாறி சிறுவன் குப்பைக் குழியில் விழுந்ததாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சாதிய பாகுபாடோ அல்லது உள்நோக்கத்துடன் கூடிய தாக்குதலோ இல்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். காயமடைந்த சிறுவனுக்குச் சக மாணவர்களே முதலுதவி செய்து ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள காவல்துறை, இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
