ஒரு கதை புதிதாக இருந்தால் தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள்… தியாகராஜன் குமாரராஜா பகிர்ந்த சம்பவம்!

By vinoth on மாசி 5, 2025

Spread the love

இந்திய சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கு வயது நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. உலகளவில் அதிகம் சினிமா உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆனாலும் இந்திய சினிமாக்கள் உலக திரைப்பட விழாக்களில் பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை.

குறிப்பாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இல்லாத விதமாக இந்திய சினிமாக்களில் பாட்டு, இடைவேளை என கமர்ஷியல் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இது படத்தின் திரைக்கதையையே பாதிக்கின்றன.

   

ஆனாலும் இந்திய சினிமாவில் சில அரிய பரிசோதனை முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி தமிழ் சினிமாவில் ஒருவராக தோன்றியவர்தான் தியாகராஜன் குமாரராஜா. அவர் இதுவரை இயக்கியது இரண்டே படங்கள்தான். ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள்தான்.

   

அந்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவரது படங்களைக் கொண்டாடவும் சிலாகிக்கவும் ஒரு சிறிய அளவிலான கூட்டம் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புதுமையானக் கதைகளை எழுதுவதில் இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்து ஒரு மேடையில் பேசியுள்ளார்.

 

அதில் “நான் ஒருமுறை பிரபல இந்தி திரைக்கதை எழுத்தாளர் ஜாவேத் அக்தர் அவர்களை பார்க்க போயிருந்தேன். அப்போது அவர் ஒரு விஷயத்தை சொன்னார். அது எனக்கு ரொம்ப முக்கியமான விஷயமாகப் பட்டது. அவர் ஒரு நல்ல கதையை எழுதிவிட்டு, அதை ஒரு முன்னணிதயாரிப்பாளரிடம் போய் சொல்லியுள்ளார்.

செல்வதற்கு முன்னால் அவர் அந்த கதைமேல் மிகவும் நம்பிக்கையோடு சென்றுள்ளார். அந்த கதையை சொல்வதற்கு முன் கூட தயாரிப்பாளரிடம் ‘இந்த கதையை நான் சொல்லும்போது உங்களால் ஒருநிமிடம் கூட அதில் இருந்து விலக முடியாது. தண்ணீர் கூட குடிக்கமாட்டீர்கள்” என சொல்லிவிட்டு அதன் பின் கதையை முழுவதுமா சொல்லியுள்ளார்.

அந்த கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ‘இது மிகச்சிறப்பாக , புதுமையாக இருக்கிறது. நீங்கள் சொன்னது உண்மைதான். எனக்கு தண்ணீர் கூட குடிக்க தோன்றவில்லை. ஆனால் நான் இதை தயாரிக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார். ஏனென்றால் நான் இதற்கு முன் இதுபோல கதையைக் கேட்டதேயில்லை. இது புதிதாக இருக்கிறது’ என்று சொன்னாராம்.” எனப் பகிர்ந்துள்ளார்.