பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், தமிழக முதலமைச்சர் விஜய்யின் அரசியல் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் என்ற முறையில் விஜய் ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஒட்டுமொத்த தமிழகமே பிரதமரைப் பாராட்டி உச்சி முகர்ந்து கொண்டாடும் வேளையில், முதல்வரின் இந்த மௌனம் தமிழ் வரலாற்றின் மீதான அலட்சியத்தையே காட்டுகிறது என்று அவர் சாடியுள்ளார்.
நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்திலிருந்து நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் தாயகம் திரும்பிய மகத்தான நிகழ்வுக்கு, முதலமைச்சர் விஜய் இதுவரை மெத்த மௌனம் சாதித்து வருவதாக வானதி சீனிவாசன் சுட்டிக்காட்டியுள்ளார். இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என்று விமர்சித்துள்ள அவர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு என்றால் உடனடியாக அறிக்கை கொடுக்கும் முதலமைச்சருக்கு, தமிழ் பண்பாட்டையும் சோழர் வரலாற்றையும் உலகுக்கு மீண்டும் பறைசாற்றிய பிரதமருக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லக்கூட தயக்கம் ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய நடவடிக்கைகள், கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் வழிமரபில் வந்த விஜய், தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும் போது அதற்குப் பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் அவசியப்படும் “நாகரிக அரசியலா?” என்று கேள்வி எழுப்பியுள்ள வானதி சீனிவாசன், உங்களால் மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது என்று கூறியுள்ளார். மேலும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை அரசு சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
