தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது தொண்டர்களிடையே உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது சென்னை பெரம்பூர் தொகுதி குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் அவர் களம் காணக்கூடும் என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், பெரம்பூரில் அவர் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு வலுசேர்க்கும் விதமாக, அந்தத் தொகுதியில் விஜய்க்காகவே பிரத்யேகமாக நவீன குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புதிய தவெக அலுவலகம் அமைக்கும் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்சித் தலைமையின் நேரடிப் பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஏற்பாடுகள், பெரம்பூர் தொகுதியை விஜய்யின் அரசியல் ஆடுகளமாக மாற்றுவதை உறுதிப்படுத்துவதாக கட்சி வட்டாரங்கள் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றன.
