CINEMA
இக்கட்டான சூழலில் கூட அற்புதமான வரிகளை கொடுத்த வைரமுத்து.. கவியரசுவின் முதல் பாடல் உருவான கதை..
தமிழ் சினிமாவில் இன்றியமையாத ஒரு கவிஞர் வைரமுத்து. இவரது வரிகள் இல்லாமல் தமிழ் சினிமாவில் பாடல் வரிகளே இருக்காது. தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல் வரிகளை எழுதியவர் சினிமாவிற்குள் வந்து கிட்டத்தட்ட 44 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் பாடல் உருவான விதம் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இவருக்கு திரைத்துறையில் அறிமுகம் கொடுத்த படம், இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி வெளியான நிழல்கள் என்ற திரைப்படம். இப்படத்தின் பொன்மாலைப் பொழுது பாடலை எழுதி சினிமாவிற்குள் தனது அடையாளத்தைப் பதித்தார் வைரமுத்து. ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’ ஆகிய படங்களுக்குப் பின்னர், மணிவண்ணனின் கதை வசனத்தில், பாரதிராஜா உருவாக்கிய படம் ‘நிழல்கள்.’ இளைஞர்களின் கனவுகள் குறித்த கதைக்களம். இளைஞன் வைரமுத்துவின் கனவும் அங்கே சேர்ந்தது. கனவு நனவானது. அவரின் முதல் பாடல்… காற்றில் கலந்து, தமிழகத்தை வலம் வந்தது.
எண்பதுகள் சினிமாவின் பொற்காலம் என்பார்கள். பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி அமைத்தால், அந்த வருடத்தின் சூப்பர்ஹிட் பாடல்கள் அவைதான் என உறுதி செய்யப்பட்டது. ‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே’ பாடல், எண்பதுகளில்… காதலர்களின் தேசியகீதமாயிற்று. ‘நீ பட்டுப்புடவை கட்டிக்கொண்டால், பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும்’ என்ற வரிகளில் மோட்சகதி அடைந்த ரசிகர்கள் உண்டு. பாரதிராஜவை முதன் முதலில் நேரில் சந்தித்து உங்களது படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாராம் வைரமுத்து.
அன்றிலிருந்து மூன்று மாதங்களுக்கு பிறகு வைரமுத்துவை அழைத்திருக்கிறார் பாரதிராஜா. நேராக இளையராஜாவிடம் அவரை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினாராம். அந்த நேரத்தில் வைரமுத்துவின் மனைவி தலை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாராம். அந்த நேரத்தில் தான் அந்த அழைப்பு வந்ததாம். உடனே ஓடினாராம் வைரமுத்து. மாலைப் பொழுதில் கனா காண்கிற ஒரு லட்சியவாதி பாடும் படியான ஒரு காட்சி. அந்த மெட்டுக்கு பாடல் எழுத வேண்டும் என்றாராம் இளையராஜா. மெட்டை கொடுங்கள் முயற்சி செய்கிறேன் என்றாராம் வைரமுத்து. உடனே இளையராஜா மெட்டை வாசித்து காட்டியப் பிறகு ஆர்மோனியப் பெட்டியை மூடப் போனாராம் இளையராஜா.
உடனே அவரை தடுத்த வைரமுத்து, ஒரு பல்லவி தயாராக இருக்கிறது கேட்கிறீர்களா என வைரமுத்து கேட்க, அதற்குள் பல்லவி தயாராகி விட்டதா என இளையராஜா அதிர்ச்சியடைய, அவர் வரிகளை கூற, அப்படியே பாடலாக மாறியிருக்கிறது. அப்படி இக்கட்டான சூழலுக்கு மத்தியில் இந்த பாடல் வரிகள் அமைந்து, இன்று வரையிலும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது பொன்மாலை பொழுது.