அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயமாகப் பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் தலையிடும் இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், இதனைத் தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் ஏற்காது என்பதை முதலமைச்சர் விஜய் அவர்கள் மத்திய அரசிடம் கறாராகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் தேசிய கீதமாக ‘ஜன கண மன’ பாடலா அல்லது ‘வந்தே மாதரம்’ பாடலா என்ற விவாதம் நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்ட ஒன்று. விரிவான நாடாளுமன்ற வாதங்களுக்குப் பிறகே, ‘ஜன கண மன’ பாடல் நாட்டின் தேசிய கீதமாகத் தேர்வு செய்யப்பட்டு கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அதிகாரத்தில் இருக்கும் பாஜக அரசு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தூண்டுதலால் ‘வந்தே மாதரம்’ பாடலைத் தேசிய கீதமாக மாற்றும் உள்நோக்கத்தோடு, தற்போது அதனை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
வரலாற்று ரீதியாக, 1880-களில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரால் எழுதப்பட்ட இப்பாடலின் முதல் இரு பத்திகளுக்குப் பிறகு இந்துக் கடவுள்களைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இது பிற மதத்தினரின் வழிபாட்டுக் கொள்கைகளுக்கு எதிராக அமையும் என்பதால், விடுதலைப் போராட்டக் காலத்திலேயே இதற்குப் பரவலான எதிர்ப்பு இருந்தது. இதனை உணர்ந்த ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்கள், மக்களிடையே ஒற்றுமையைப் பேணும் நோக்கில், மதக் குறிப்புகள் இல்லாத முதல் இரண்டு பத்திகளை மட்டும் காங்கிரஸ் கூட்டங்களில் பாடலாம் என்று 1937-ல் ஒரு சமரசத்தை ஏற்படுத்தினர். பின்னர் 1950-ல் அரசியல் நிர்ணய சபையிலும் விவாதிக்கப்பட்டு ‘ஜன கண மன’ பாடலே இறுதி செய்யப்பட்டது.
‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டைக் கொண்டாடியது முதற்கொண்டே, அதனைத் தேசிய கீதமாக அறிவிக்க பாஜக அரசு துடித்து வருவதாகத் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன், மதச்சார்பின்மைக்கு எதிரான ஒரு குறிப்பிட்ட மதச்சார்புள்ள பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்குவது அப்பட்டமான மதவாத அரசியல் செயல்திட்டமாகும் என்று சாடியுள்ளார். எனவே, இந்தச் சுற்றறிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், தமிழக அரசு இதனை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்றும் விசிக சார்பில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
